இயக்குனர் சிறுத்தை சிவா, பாபி தியோல் குறித்து பேசி உள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் கடைசியாக ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதில் வாய் பேசாதவராக நடித்திருந்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார் பாபி தியோல். அடுத்தது இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 69 படத்தில் வில்லனாக நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இதற்கிடையில் இவர் சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்காக மும்பை, ஐதராபாத், டெல்லி போன்ற பகுதிகளில் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ட்ரெய்லரில் பாபி தியோலின் காட்சிகள் இடம் பெற்றிருந்த நிலையில் அவர் கங்குவா படத்தில் ஏற்று நடித்திருக்கும் வில்லன் கதாபாத்திரம் ஸ்ட்ராங்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
அதன்படி சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய சிறுத்தை சிவா, “கங்குவா படத்தில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலுவானது. வில்லன் கதாபாத்திரத்தை நாங்கள் தேர்ந்தெடுக்கும் சமயத்தில் இன்ஸ்டாகிராமில் பாபி தியோலின் ரீல்ஸ் ஒன்றை பார்த்தோம். அதைப் பார்த்துதான் அவரை வில்லனாக தேர்வு செய்தோம். அனிமல் திரைப்படம் அப்போது வெளியாகவில்லை. வில்லனாக நடிப்பதற்கு பாபி தியோலை அணுகிய போது அவர் ஆச்சரியமடைந்தார். கங்குவா கதையைக் கேட்டதும் அவர் தனக்கான கால் ஷீட்டை ஒதுக்கி கொடுத்து நடிக்க வந்தார்” என்று தெரிவித்துள்ளார்.