சிவகார்த்திகேயன் – ரவி நடிக்கும் பராசக்தி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதேபோல் நடிகர் ரவியும் முன்னணி நடிகராவார். இவர்கள் இருவரும் இணைந்து ‘பராசக்தி’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் இதில் கதாநாயகனாக நடிக்க ரவி வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய வெற்றி படங்களை கொடுத்த சுதா கொங்கரா இயக்குகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ரவி கே. சந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படமானது இந்தி திணிப்பை மையமாக வைத்து 1950- 60 காலகட்டத்தில் நடப்பது போன்று எடுக்கப்படுகிறது. இதன் படப்பிடிப்புகள் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டு மதுரை, சிதம்பரம், இலங்கை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு பூந்தமல்லி பகுதியில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில காட்சிகள் மட்டும் ஐதராபாத்தில் படமாக்கப்பட இருக்கிறதாம்.
அதாவது ஏற்கனவே ‘பராசக்தி’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் வருகின்ற அக்டோபர் 15 அல்லது தீபாவளிக்குள் நிறைவடைந்து விடும் என சொல்லப்பட்டது. இதற்கிடையில் இந்த படம் 2026 ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரைக்கு வரும் என படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.