நடிகர் எஸ் ஜே சூர்யா, கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானவர். இவரின் முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. அதை தொடர்ந்து விஜய் நடிப்பில் குஷி எனும் திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
எஸ் ஜே சூர்யா ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமல்லாமல் சிறந்த நடிகர், இசையமைப்பாளர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளரும் ஆவார். இவர் நியூ, அன்பே ஆருயிரே, திருமகன், வியாபாரி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஹீரோவாக பார்க்க முடிந்த எஸ் ஜே சூர்யாவை தற்போது வில்லனாகவும் பல படங்களில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் ஸ்பைடர், மெர்சல், மாநாடு உள்ளிட்ட படங்களில் வில்லனாக மிரட்டியிருந்தார். கடைசியாக எஸ் ஜே சூர்யா, மார்க் ஆண்டனி படத்தில் தனது காமெடி கலந்த நடிப்பினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் சங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ் சினிமாக்களில் வில்லன் என்றாலே நினைவுக்கு வருவது எஸ் ஜே சூர்யா தான். இப்படிப்பட்ட எஸ் ஜே சூர்யா இயக்குனர் ஆவதற்கு முன்பாக ஹோட்டலில் சர்வராக வேலை செய்வதாக அவரே வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இதனை, சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் “நான் லயோலா கல்லூரியில் படித்து முடித்த பிறகு ஹோட்டல் ஒன்றில் சர்வராக வேலை செய்தேன். அப்போது டேபிள் துடைக்கும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது என்னுடன் படித்தவர்கள் அந்த ஹோட்டலுக்கு சாப்பிட வருவார்கள். ஆனால் நான் கூச்சமே பட மாட்டேன். வேலைன்னு வந்துட்டா நான் எதையுமே நினைக்க மாட்டேன். உங்களுடைய உண்மையான உழைப்பிற்கு ஊதியம் வருகிறது என்றால் அதுதான் கடவுள். எனக்கு டைரக்ஷனும், நடிப்பும், இசையும்,அந்த டேபிளும், கடவுளும் தாயும் ,தந்தையும் எல்லாமே ஒன்றுதான்” என்று எஸ் ஜே சூர்யா கூறியிருக்கிறார்.