கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
பிரபல நடிகரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி தான் கிருத்திகா என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘வணக்கம் சென்னை’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். அதைத் தொடர்ந்து ‘காளி’ என்ற படத்தையும், ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் தொடரையும் இயக்கியிருந்தார். கடைசியாக இவர், ரவி – நித்யா மேனன் நடிப்பில் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி என்ன படம் இயக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிருத்திகா, விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக பேச்சு அடிபட்டது.
 தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் இதற்காக விஜய் சேதுபதி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். ஆகையினால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன், பூரி ஜெகன்நாத் ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடித்து முடித்த பின் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிப்பார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


