நடிகர் எஸ்.ஜே. சூர்யா, ரவி மோகன் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ரவி மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார். இருப்பினும் சமீப காலமாக இவர்தான் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்நிலையில் இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் தனது 34 வது படமான கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரவி மோகன். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தவிர ரவி, இன்னும் சில படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் ரவி, ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிய வந்தது.
இந்தப் படத்தில் தான் நடிகர் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தை ரவி மோகன் தயாரிக்க உள்ளார் எனவும் இந்த படமானது டபுள் ஹீரோ சப்ஜெக்டாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. விரைவில் மற்ற அப்டேட்டுகளும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் எஸ்.ஜே. சூர்யா, இயக்குனராக தனது திரைப் பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.