நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில், தனது அனுமதியின்றி ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடலை உருமாற்றிப் பயன்படுத்தியதற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அந்தப் பாடலைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் 27-ஆம் தேதி ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘ஹேப்பி ராஜ்’ என்ற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் உருவான முரட்டுக்காளை (1980) படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “எனது அனுமதியின்றி, பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடல் ஹேப்பி ராஜ் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பாடலை உருமாற்றியும் (Remix/Recreate) செய்துள்ளனர். எனவே, இத்திரைப்படத்தில் எனது பாடலைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்; அத்துடன் படத்திலிருந்து அந்தப் பாடலை முழுமையாக நீக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.குமரேஷ்பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சரவணன், “மனுதாரரின் எவ்வித முன் அனுமதியும் பெறாமல், அவரது பதிப்புரிமையை அப்பட்டமாக மீறி இப்பாடல் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பாடலின் தன்மையை உருமாற்றியும் உள்ளதால், இதற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.குமரேஷ்பாபு, ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என்ற பாடலைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரம் குறித்து இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் உரிய பதிலளிக்க உத்தரவிட்டு, அவர்களுக்கு நீதிமன்றம் சார்பில் நோட்டீஸ் அனுப்பவும் ஆணையிட்டுள்ளார். சினிமா பாடல்களின் பதிப்புரிமை (Copyright) தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
