சுந்தர். சி, தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் சுந்தர் சி நடிப்பில் கடைசியாக தலைநகரம் 2 திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து சுந்தர் சி நடிப்பில் உருவாகியுள்ள ஒன் 2 ஒன் திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் சுந்தர். சி , அரண்மனை 4 திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் புதிய ரிலீஸ் தேதியையும் பட குழுவினர் இதுவரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் சுந்தர்.சி அடுத்ததாக கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் கலகலப்பு. நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ஜீவா, ஜெய், காத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோரின் கூட்டணியில் கலகலப்பு 2 திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் கடந்த 2018 இல் வெளியானது. இந்த இரண்டு படங்களில் இடம் பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் சுந்தர் சி, தனது அரண்மனை படத்தை, அடுத்தடுத்த பாகங்களாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கதையாக இயக்கி வருவது போல கலகலப்பு திரைப்படத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே கலகலப்பு 1 மற்றும் 2 படங்கள் வெளியானதன்படி, அடுத்ததாக உருவாக உள்ள கலகலப்பு 3 திரைப்படத்தில் நடிகர் கவின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை சமயம் நடிகர் கவின் தற்போது பல படங்களில் கமிட்டாகி இருப்பதால் அரண்மனை 4 படத்தின் ரிலீஸுக்கு பிறகு கலகலப்பு 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.