இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.
இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் டி10 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளும், கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இத்தொடரில் மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகரைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்நிலையில், சென்னை அணியின் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளதாக அவரது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஏற்கனவே, மும்பை அணி உரிமத்தை அமிதாப் பச்சன், ஐதராபாத் உரிமத்தை ராம்சரண், பெங்களூரு உரிமத்தை ஹிருத்திக் ரோஷன், ஜம்மு காஷ்மீர் அணியை அக்ஷய் குமார் வாங்கி உள்ளார். இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் போட்டியில் பங்குபெறும் அணி ஒன்றில் 16 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
ஒரு அணிக்கு உதவிப் பணியாளர்கள் 6 பேர் இருக்கலாம். ஒவ்வொரு அணிக்கும ஒரு கோடி ரூபாய் ஏலத் தொகையாக வழங்கப்படும். வீரர்களுக்கான ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர் ஒருவருக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை 3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வரம்பு கிடையாது. சர்வதேச போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களை போன்று விளையாட வேண்டும் என்ற கனவோடு, உள்ள இளைஞர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.