நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷனுக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் சமீபத்தில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார். சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் சூர்யா ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படமானது ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் அகரம் பவுண்டேஷனுக்கு ரூ. 10 கோடி வழங்கியுள்ளார் சூர்யா. அது மட்டும் இல்லாமல், “ஒவ்வொரு வருடமும் நம்பிக்கையோடு அகரம் பவுண்டேஷனுக்கு விண்ணப்பம் செய்யும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் மிகக் குறைவானவர்களுக்கே உதவ முடிகிறது. ஆனால் ரெட்ரோ படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவின் மூலம் கிடைத்த அன்பு தொகையில் ரூ. 10 கோடியை அகரம் பவுண்டேஷனுக்கு பகிர்ந்து அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற கல்வி உதவியை சுற்றி இருப்பவர்களுக்கு வழங்குவோம். கல்வியே ஆயுதம், கல்வியே கேடயம்” என்று தெரிவித்துள்ளார்.