அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மூன்று பெரிய ஹீரோக்களின் படங்கள் மோதப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
குட் பேட் அக்லி
அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தினை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித் தவிர திரிஷா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ் உள்ளிட்டோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் போன்ற பகுதிகளில் ஏற்கனவே தொடங்கப்பட்டு முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்கிடையில் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியான போதே படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை மீண்டும் உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பொங்கலுக்கு வருவதை உறுதி செய்தது குட் பேட் அக்லி படக்குழு.
SK23
சிவகார்த்திகேயன் தற்போது தனது 21வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். SK23 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். ஏ ஆர் முருகதாஸ் ஏற்கனவே இயக்கி இருந்த கத்தி, துப்பாக்கி போன்ற படங்களை போல் இந்த படமும் முழுக்க முழுக்க ஆக்சன் கலந்த கமர்சியல் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், வித்யூத் ஜம்வால், விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
சூர்யா 44
கார்த்திக் சுப்பராஜ், சூர்யா ஆகியவரின் கூட்டணியில் சூர்யா 44 திரைப்படம் உருவாகி வருகிறது. சூர்யாவும் கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் அந்தமான் பகுதியில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு ஊட்டி, கேரளா போன்ற பகுதிகளிலும் நடைபெற்றது. அடுத்தது சென்னையிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.