இளையராஜா பணத்தாசை பிடித்த மனிதர் இல்லை என விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
திரைத்துறையில் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான இசையினால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் இளையராஜா. எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இசை என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது இளையராஜா தான். இவர் கடந்த மார்ச் மாதம் லண்டனுக்கு சென்று தன்னுடைய முதல் சிம்பொனியை அரங்கேற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் பழைய பாடல்களை தற்போது வெளியாகும் புதிய படங்களில் பயன்படுத்துவது ட்ரெண்டாக மாறிவிட்டது. அந்த வகையில் தான் கடந்த ஏப்ரல் 10 அன்று வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி படத்திலும் இளையராஜாவின் ‘இளமை இதோ’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’, ‘ஒத்த ரூபாயும் தாரேன்’ போன்ற பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த மூன்று பாடல்களையும் குட் பேட் அக்லி படக்குழு இளையராஜாவின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இளையராஜா, படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இது தொடர்பாக கங்கை அமரனும் விழா மேடையில், “குட் பேட் அக்லி படம் வெற்றி பெற்றதற்கு அஜித் எல்லாம் காரணம் இல்லை. எங்களுடைய பாடல்களால் தான் அப்படம் வெற்றி பெற்றது” என்பது போன்று கூறியிருந்தார். மேலும் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, ‘தல படம் தலனால தான் ஓடும்” என்று கூறி கங்கை அமரனின் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருந்தார். இது தவிர இளையராஜா ஏற்கனவே கூலி, மஞ்சும்மெல் பாய்ஸ் படக்குழுவினருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். எனவே தான் சமூக வலைதளங்களில், இளையராஜா பணத்தாசையால் தான் இப்படி பிரச்சினை செய்கிறார் என்று பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு இந்த தகவல் காட்டு தீயாய் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது இது குறித்து பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தன்னுடைய கருத்தினை தெரிவித்து இருக்கிறார்.
அதன்படி அவர், “இளையராஜா சார் என் பாட்டை பயன்படுத்துவதற்கு முன்பு என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே என்று தான் சொல்கிறார். அதாவது ஒரு பாட்டை உருவாக்குவது என்பது பெத்தவங்க மாதிரி தானே. அதனால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே என்று தான் சொல்லி இருப்பார். அவர் பணத்தாசை பிடித்த மனிதரெல்லாம் இல்லை. பலருக்கும் சம்பளம் இல்லாமல் அவர் வேலை செய்து கொடுத்து, ராமராஜன் சார், ராஜ்கிரண் சார் போன்ற பல புதிய ஹீரோக்களை உருவாக்கி இருக்கிறார். ஒரு வார்த்தை என்கிட்ட கேட்டிருக்கலாமே என அவர் நினைத்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.