சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.
பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த நவம்பர் 18ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதன்படி விஜயகாந்த்திற்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. அதே வேளையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும் தேவையில்லாத வதந்திகளை பரப்பவும் வேண்டாம் நம்பவும் வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் விஜயகாந்த் உடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு விரைவில் விஜயகாந்த் குறித்து நல்ல செய்தி வரும் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
விஜயகாந்த் குணமடைய வேண்டுமென நடிகர்கள் ,தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து வந்தனர். அவர்களின் பிரார்த்தனைக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.