அப்பா விட்டுச் சென்ற பணிகளை தொடரவிருப்பதாகவும், அவரது மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளதாகவும் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்கள் கூறியுள்ளனர்.
மறைந்த நடிகர் மயில்சாமியின் மூத்த மகன் அன்பு மற்றும் இளைய மகன் யுவன் ஆகியோர், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அன்புவும், யுவனும்,
தங்களது தந்தை மறைந்த போது, தங்கள் குடும்பத்துக்கு உறுதுணையாக நின்ற
ஊடகத்தினர், காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.

தந்தையின் மறைவு பற்றிய செய்தி, ஒரு சில ஊடகங்களில் மாற்றி வெளிப்படுத்தப்பட்டதாக கூறிய மயில்சாமியின் மூத்த மகன் அன்பு, அவர் இறக்கும் சமயத்தில் உடனிருந்தவன் என்ற முறையில் விளக்கமளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

சாலிகிராமம் வீட்டில் இருந்து, கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு அப்பாவுடன் குடும்பத்தோடு சென்றதாகவும், இரவு நிகழ்ச்சியை கோவிலில், இரண்டரை மணிக்கு முடித்து, பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்த அவரோடு சாப்பிட்டு விட்டு, தொலைக்காட்சியில் செய்தி பார்த்ததாகவும் அன்பு தெரிவித்தார்.
பின்னர், படுக்கச் சென்ற 10 நிமிடத்தில், அப்பாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக அம்மா சொன்னதையடுத்து, தந்தை மயில்சாமியை காரில் அமர வைத்து, சாலிகிராமத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறினார். ஆனால், வழியிலேயே மயில்சாமியின் உயிர் பிரிந்து, உடல் சாய்ந்ததென்றும் மகன் அன்பு விளக்கினார்.
தர்மம் எங்கிருக்கிறதோ அங்கெல்லாம் எம்.ஜி.ஆர் இருக்கிறார் என்ற அப்பாவின் வார்த்தைகளை, தர்மம் எங்குள்ளதோ அங்கு எம்.ஜி.ஆர், என் அப்பா, மறைந்த நடிகர் விவேக் ஆகியோர் இருக்கிறார்கள் என, அன்பும், யுவனும் கூறினார்கள்.

அப்பா விட்டுச் சென்ற சமூகத் தொண்டு உள்ளிட்ட பணிகளை தம்பி யுவனுடன் இணைந்து மேற்கொள்ளப் போவதாக அன்பு தெரிவித்தார்.
மயில்சாமியின் செல்ஃபோனை அணைத்து வைக்காமல் தாங்கள் பயன்படுத்தப் போவதாக அவரது மகன்கள் கூறினார்கள்.
நடிகர் விவேக் வாழ்ந்த வீதிக்கு அவரது பெயர் வைக்ககப்பட்டது போல், மயில்சாமி வீடு இருக்கும் வீதிக்கு அவரது பெயரை வைக்க குடும்பத்தார் கோரிக்கை விடுப்பார்களா? என்ற கேள்விக்கு, அவ்வாறு வைப்பதில் தமது தந்தைக்கு உடன்பாடு இருக்காது என்று மகன்கள் பதிலளித்தனர்.
மகன்களுடன் மயில்சாமிக்கு பிரச்சினை என்பது போன்ற தவறான தகவல்களை சில யூ-டியூப் சேனல்கள் வெளியிடுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
அப்படி தவறான தகவல்களை தொடர்ந்து வெளியிட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தயார் என்று மயில்சாமியின் மகன்கள் அன்புவும், யுவனும் எச்சரித்தனர்.


