ஆவடி அருகே 50 பேரிடம் 2 கோடியே 86 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது:
மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டுமென ஆவடி காவல் ஆணையராக குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் போராடியதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஆவடி ,திருமுல்லைவாயல் சாந்திபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் ஜாய்ஸ் விக்டோரியா(55). இவர் நுங்கம்பாக்கத்தில் ஜாய்ஸ் இன்ஃப்ரா டெக் எனப்படும் சர்க்கரை ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வந்தார். மேலும் அதிக முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தருவதாக தனக்கு தெரிந்தவர்களிடம் ஜாய்ஸ் விக்டோரியா கூறியதாக தெரிகிறது.
இதனையறிந்து அவரது நிறுவனத்துக்கு வந்த முத்தியால்பேட்டையை சேர்ந்த ஜோசப் (44) என்பவரிடம், தாங்கள் முதலீடு செய்யும் பணத்திலிருந்து பத்து மாதங்களுக்கு 25 சதவிகிதம் வட்டி தருவதாக கூறி உள்ளார். இதனை நம்பி ஜோசப் தன்னிடமிருந்த 21 லட்சம் ரூபாயை முதலீடு செய்துள்ளார். மேலும் 5 லட்சம் பணமும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஒரு மாதம் கழித்து வட்டி பணத்தை கேட்க சென்ற போது அதனை தர மறுத்த ஜாய்ஸ் விக்டோரியா, ஜோசப் முதலீடு செய்த பணத்தையும் தர மறுத்துள்ளார். மீறி பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோசப், ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், ஜாய்ஸ் விக்டோரியா இதே போல் சுமார் 50 நபர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்து காவலில் எடுத்த போலீசார் ஜாய்ஸ் விக்டோரியாவிடம் நடத்திய விசாரணையில் சுமார் 2 கோடி 86 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவரது கணவர் ஃப்ராங்க்லின், மகள் மெர்லின், மருமகன் ஜோ சேவியோ என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கடந்த வாரம் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் திருமுல்லைவாயல் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் ஜாய்ஸ் விக்டோரியாவால் ஏமாற்றபட்ட அனைவரும் ஒன்றிணைந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஜாய்ஸ் விக்டோரியாவை கைது செய்ய வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட முயன்றதும் குறிப்பிடத்தக்கது.