கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்து மூன்று மடங்காக பணம் கிடைக்கும் என சுமார் 5000 க்கு மேற்பட்டோரிடம் 200 கோடிக்கு மேல் ஹாஷ்பே நிறுவனம் மோசடி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அதிக வட்டி தருவதாகவும் குறைந்த நாட்களில் அதிகளவு பணம் சம்பாதிக்கும் ஆசையிலும் லட்சக்கணக்கான மக்கள் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் ஐ எஃப் எஸ் மற்றும் ஹிஜாபு ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்து கோடிக்கணக்கான ரூபாய் பொதுமக்கள் பணத்தை இழந்த விவகாரத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து இதுபோன்று பொதுமக்களை மோசடி செய்த நிறுவனங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த அடிப்படையில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் நிறுவனம் அமைத்து கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி ஆயிரக்கணக்கான மக்களிடம் சுமார் 200 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த ஹாஷ்பே என்ற நிறுவனத்தின் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
எம்எல்எம் என்ற அடிப்படையில் ஆட்களை சேர்த்து வைத்தால் கமிஷன் தொகை என்பதன் மூலம் ஆயிரக்கணக்கான இந்த நிறுவனத்தில் கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்து மோசடிக்குள்ளாகியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். Hashpe எனப்படும் இந்த நிறுவனம் TCX காயின் என்ற கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்வதாகக் கூறி மோசடி நிகழ்த்தியுள்ளது. ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் ஒவ்வொரு நாளும் ஒரு சதவீதம் லாபம் என்ற அடிப்படையில் 300 வது நாளில் மூன்று மடங்காக மூன்று லட்ச ரூபாயாய் கிடைக்கும் என கூறி பொதுமக்களிடம் மோசடியை நிகழ்த்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து உள்ளனர்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் வெப்சைட் ஒன்றை உருவாக்கி ஆன்லைன் மூலமாகவே பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வாடிக்கையாளர்களை முதலீடு செய்ய வைத்துள்ளனர். இந்த நிறுவனத்தில் ஆட்களை சேர்த்து விடும் நபர்களுக்கு கமிஷன் தொகை கிடைக்கும் என்ற அடிப்படையில் ஒவ்வொருவராக பல பேரை சேர்த்து 5000க்கும் மேற்பட்டோர் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் அல்லாது ஆந்திரா கர்நாடகா மற்றும் வட மாநிலம் என மற்ற மாநிலங்களிலும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து மோசடிக்கு உள்ளாகியுள்ளவர்கள் புகார் அளித்துள்ளனர்.
அதிக பணம் கிடைக்கும் என நண்பர்கள் உறவினர்களிடம் பணத்தை வசூல் செய்து முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளாக பாபு ,இம்ரான், ஹித்தேஷ் ஜெயின் ஆகியோர் பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து திருப்பித் தராமல் மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர் . நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தி விளம்பரம் செய்ததால் நம்பி பணத்தை முதலீடு செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் உள்ள நட்சத்திர விடுதிகளிலும் சொகுசு கப்பலிலும் நடிகைகளை அழைத்து கூட்டங்கள் நடத்தியதாகவும் பல பேர் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதித்தது குறித்தும் சொல்வதைக் கேட்டு கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஏமாந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முதலில் டிசிஎக்ஸ் என்ற கிரிப்டோ கரன்சியில் மதிப்பு அதிகமாக இருக்கும் போது தாங்கள் அதை நம்பி பணத்தை முதலீடு செய்ததாகவும் ஆனால் அவ்வாறு முதலீடு செய்த பணத்தை முறைகேடாக மாற்றி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்து மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தாங்கள் சொந்தமாகவே கிரிப்டோகரன்சி காயின் உருவாக்கியுள்ளதாகவும் அதில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி முதற்கட்டமாக சில தவணைகளுக்கு பணம் அளித்த அந்த நிறுவனம் முற்றிலுமாக பணத்தை கொடுக்காமல் மோசடி செய்வதாக தெரிவித்துள்ளனர். முதலீடு செய்த பணத்தை இந்திய ரூபாய் மதிப்பில் தருவதாக கூறிய அந்த நிறுவனம், தற்போது கிரிப்டோ கரன்சிகள் ஆகவும் நிலமாகவும் தருவதாக கூறி தங்களை ஏமாற்றி வருவதாக பணத்தை இழந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 5000க்கும் மேற்பட்டோர் 200 கோடி ரூபாய்க்கு மேல் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்துள்ளதாகவும் புகார் அளித்துள்ளனர். தற்போது இந்த கும்பல் வட மாநிலத்தில் வேறு ஒரு இணையதளம் மூலம் வடமாநிலத்தவர்களை ஏமாற்ற துவங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிறுவன நிர்வாகிகளை கைது செய்து மோசடி செய்த பணத்தை மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். புகார் அளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இழந்த தொகையின் மதிப்பை அடிப்படையாக வைத்து இந்த வழக்கு பொருளாதார குற்ற பிரிவுக்கு மாற்றப்படலாம் என சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.