நாங்குநேரி மாணவர்கள் மோதல்- 6 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு
நாங்குநேரி மாணவர்கள் மோதல் தொடர்பாக 6 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய மோதலால் பள்ளி மாணவரையும், அதனை தடுக்கமுயன்ற அவரது சகோதரியையும், சக மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்புப் படிக்கும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னத்துரையோடு ஒப்பிட்டு நன்றாக படிக்கும்படி சக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறியது, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியதால் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நெல்லை மாவட்ட காவல்துறை, “நாங்குநேரி காவல் நிலைய சரகம் நாங்குநேரியில் உள்ள மாணவர்களுக்கிடையே பள்ளி வளாகத்தில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. பின் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவனின் தாய் அதே பள்ளியை சேர்ந்த மாணஷ்கள் தன் மகனிடம் தகராறில் ஈடுபடுவதாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்டு இளஞ்சிறார்கள் சேர்ந்து. 09.08.2023-ம் தேதி அந்த மாணவனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவதூறாக பேசி அருவாளால் தாக்கி ரத்த காயம் ஏற்பட்டுத்தியும், தடுக்க வந்த அவருடைய தங்கையையும் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர். பின் அந்த மாணவனும், அவருடைய தங்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
மேற்படி சம்பவம் குறித்து நாங்குநேரி காவல் நிலையத்தில் காயப்பட்ட மாணவனின் தாய் அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இக்குற்றச் செயலில் ஈடுபட்ட 6 இளஞ்சிறார்களை கையகப்படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்ட்டனர். மேலும் மாணவ. மாணவியர்களிடையே பள்ளி கல்லூரிகளில் காவல்துறை, கல்வித்துறை மற்றும். மாவட்ட நிர்வாகம் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டூள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.