சங்ககிரி அருகே அடுத்தவர் மனைவியை பாலியல் இச்சைக்கு அழைத்த நெசவு கூலித் தொழிலாளியை ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கட்டையால் அடித்து கொலை செய்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள கஸ்தூரிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து( 50 ). இவர் விவசாயம் செய்து கொண்டு நெசவு கூலித் தொழிலாளியாகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்துவிற்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி ஓராண்டு மட்டுமே குடும்பம் நடத்தி விட்டு மாரிமுத்துவை விவாகரத்து செய்துள்ளார்.
இதனிடையே மாரிமுத்து தனது தாய் குப்பாயுடன் வசித்து வந்த நிலையில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார் . இதனிடையே தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது வீட்டின் அருகேயுள்ள பக்கத்து வீட்டு பெண்களை அடிக்கடி பாலியல் இச்சைக்கு அழைத்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கம்போல் குடிபோதையில் புதன்கிழமை அதிகாலை பக்கத்து வீட்டுக்காரரான சண்முகம் என்பவரது மனைவி கவிதா (34) வீட்டிற்குச் சென்ற மாரிமுத்து தூங்கிக் கொண்டிருந்த கவிதாவை பாலியல் இச்சைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
இதுபோன்று பலமுறை முயற்சி செய்தபோது மாரிமுத்துவை கட்டி வைத்துள்ளதாகவும் இதை தொடர்ந்து மீண்டும் மீண்டும் இது போன்ற முயற்சி செய்ததால் இன்று கவிதா அவரது கணவர் சண்முகம் உறவினர்கள் பூபதி, ராஜமாணிக்கம், சிவக்குமார் ஆகிய ஐந்து பேரும் மாரிமுத்துவை துரத்திச் சென்று கட்டையால் தாக்கி உள்ளனர்.
இதில் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரிமுத்துவை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து மாரிமுத்துவின் அண்ணன் மகன் மோகன்ராஜ் சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கவிதா அவரது கணவர் சண்முகம் உறவினர்கள் பூபதி, ராஜமாணிக்கம், சிவக்குமார் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட பின்னர் சிறையில் அடைத்தனர்.
சங்ககிரி அருகே நெசவு கூலித் தொழிலாளி குடிபோதையில் அடுத்தவர் மனைவியை அடிக்கடி பாலியல் இச்சைக்கு அழைத்து தொந்தரவு செய்தாக ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.