தனது வீட்டை உடைத்து பொருட்களை திருடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரின் கணவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளருக்கும், காவல் ஆய்வாளருக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதால் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேறு ஒரு காவல் ஆய்வாளரை நியமனம் செய்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கிழ்வாசல் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருக்கிறார்.
அதில், ” கடந்த 2021ஆம் ஆண்டு கடலாடி காவல்துறை அதிகாரிகள் என்னை சட்டவிரோத காவலில் வைத்து தாக்கினர். இது தொடர்பாக மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்த போது, 5 லட்ச ரூபாயை எனக்கு இழப்பீடாக வழங்க, கடந்த 2023ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இழப்பீடு வழங்கப்படாததால், தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி எனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது, உள்ளே பார்த்த போது 60 ஆயிரம் பணம், தங்க நகை காணாமல் போய் இருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே எனது வீட்டை உடைத்து பொருட்களை திருடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, எனது நகை மற்றும் பணத்தை மீட்டு தர உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், ” மனுதாரர் இந்த சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளருக்கும், இளஞ்செம்பூர் காவல் ஆய்வாளருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதால், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேறு ஏதேனும் ஒரு காவல் ஆய்வாளரிடம் மனுதாரரின் மனுவை பரிசீலித்து இரண்டு வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.