போலி ஆவணங்கள் மூலம் வங்கி மோசடி வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 2 வருடங்கள் தலைமறைவாக இருந்து வந்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.வங்கி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த சுவாமிதாஸ் பாண்டியன் மற்றும் அவரது மனைவி மேரி ஜாக்குலின் ஆகிய இருவரும் S Blue Metal Quarry என்ற தொழில் செய்ய வேண்டி பாரத ஸ்டேட் வங்கி (நகர், அடையாறு கிளைகள்) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ((மயிலாப்பூர் கிளை) ஆகிய வங்கிகளில் போலியான ஆவணங்களை கொடுத்து மொத்தமாக ரூ.20,75,000/- தொகையை கடன் பெற்று வங்கிகளுக்கு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் திரு.வாசுதேவன், பாரத ஸ்டேட் வங்கி தி.நகர் கிளை உதவி மேலாளர்கள் திரு.விமல் லெஸ்லி மற்றும் அடையாறு கிளை உதவி மேலாளர் திரு.பாலன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கை எழும்பூர் கூடுதல் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் இருவரும் 2 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி குற்றவாளிகள் இருவரையும் சூரப்பட்டில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும்,நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கையும் களவுமாக மாட்டிய நில எடுப்பு தனி வட்டாட்சியர், இடைத்தரகர்கள் கைது…