சென்னையில் தங்கமுலாம் பூசப்பட்ட தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைத்து 22 இலட்சம் பணம் பெற்று மோசடி செய்தவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை என்எஸ்சி போஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ஹர்சல் சிவாஜி/33, இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் 332 கிராம் தங்க நகைகளை, தம்பு செட்டி தெருவில் உள்ள ஐடிபிஐ வங்கியில் அடமானம் வைத்து ரூ.22 இலட்சம் வரை கடனாக பெற்றுள்ளார். இரண்டு வருடங்களாக நகைக்கு வட்டியும் கட்டாமல் , நகையும் மீட்காததால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நகைகளை ஏலம் விடுவதற்காக வங்கி அதிகாரிகள் நகைகளை சோதனை செய்த போது அவை தங்க முலாம் பூசப்பட்ட போலியான நகைகள் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் வங்கி அதிகாரிகள் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஏற்கனவே இதேபோல மணப்புரம் கோல்டு லோனில் போலி தங்க நகைகளை வைத்து 18 இலட்சம் வரை பெற்று மோசடி செய்த வழக்கில் கைதான சிவாஜி ஹைர்சல் தான் இந்த மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. கடந்த மூன்று மாதங்களாக போலீசார் தேடி வந்த இந்த குற்றவாளியை நேற்று பிடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் வங்கியின் நகைமதிபீட்டாளர் ஹைரிபிரசாத் என்பவனை போலீசார் தேடிவருகின்றனர்.


