சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் தற்காலிக ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து வருபவர் மணலியை சேர்ந்த தேவி( 34) (பெயர் மாற்றப்பட்டுள்ளது ). இவரது கணவர் 2016 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

இவர் கடந்த ஐந்து வருடங்களாக வருமானவரித் துறை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து வருகிறார். இதே வருமான வரித்துறை அலுவலகத்தில் அண்ணா நகரைச் சேர்ந்த ரெக்ஸ் கேப்ரியல் ஃபிராங்க்டன்(36) என்பவர் 12 வருடங்களாக மூத்த வரி உதவியாளராக( senior Tax assistant) ஆக பணி செய்து வருகிறார். ரெக்ஸ் அடிக்கடி தேவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு அவரை தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் தேவி தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். கடந்த 14ம் ஆம் தேதி தரைதளத்தில் உள்ள தனது அறையில் தண்ணீர் கீழே கொட்டி விட்டதாகவும் அதை துடைக்க வருமாறு தேவியை ரெக்ஸ் அழைத்துள்ளார். அப்போது அங்கு வந்த தேவியை ரெக்ஸ் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார். தேவி அவரை தள்ளிவிட்டு வெளியே வந்து வருமானவரித்துறை உயர் அதிகாரிகளிடம் வாய்மொழியாக புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனால் மனமுடைந்த தேவி கடந்த 15 ஆம் தேதி வீட்டில் இருந்த கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தேவியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் தேவி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று(22ம் தேதி) புகார் செய்தார். அதன் பேரில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார், இந்திய தண்டனை சட்டம் பிரிவு- 354 பெண்களின் மானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம்( பிரிவு 4) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ரெக்ஸை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை ஜனவரி 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வைஷ்ணவி உத்தரவிட்டார். அதன் பேரில் ரெக்ஸை , போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.