சென்னை மதுரவாயலில் இளம் பெண் ஒருவரைக் காதல் வலையில் வீழ்த்தி, அவரது வீட்டில் இருந்த 129 சவரன் தங்க நகைகளைச் சிறுகச் சிறுகப் பறித்துச் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கார்த்திக் உட்பட 5 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சென்னை மதுரவாயல் ஏரிக்கரை லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வன் (51). இவர் தனது அண்ணி வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த தனக்குச் சொந்தமான 22 சவரன் நகைகள் மற்றும் அண்ணிக்குச் சொந்தமான 107 சவரன் நகைகள் என மொத்தம் 129 சவரன் தங்க நகைகள் திடீரெனக் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

காதல் வலை – தந்தைக்கு உடல்நலக்குறைவு என நாடகம்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பன்னீர்செல்வனின் அண்ணியின் 3-வது மகள், கடந்த ஆண்டு பிளஸ்-2 (+2) விடுமுறையின் போது பகுதிநேர வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கும் கார்த்திக் (21) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இளம்பெண்ணின் காதலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்த கார்த்திக், தனது தந்தைக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறிப் பொய் நாடகமாடியுள்ளார். மருத்துவச் செலவிற்குப் பணம் தந்து உதவ வேண்டும் என்று அந்தப் பெண்ணை வற்புறுத்தியுள்ளார். காதலனின் பொய் வார்த்தைகளை நிஜமென நம்பிய அந்தப் பெண், தனது குடும்பத்தாருக்குத் தெரியாமல் வீட்டில் இருந்த தங்க நகைகளையும் பணத்தையும் சிறுகச் சிறுக எடுத்துச் சென்று கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.

நகைகளை விற்று சொகுசு வாழ்க்கை
காதலியிடம் இருந்து வாங்கிய நகைகளை கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து விற்றுள்ளார். அந்தப் பணத்தில் சொகுசு கார், விலை உயர்ந்த பைக், காஸ்ட்லி செல்போன்கள் வாங்கி நண்பர்களுடன் சேர்ந்து உல்லாசமாகச் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து தீர்த்துள்ளார். நகைகள் முழுமையாகக் கரைந்துபோன பிறகே, வீட்டில் நகைகள் களவு போயிருப்பது குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது. ”காதலனின் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பெற்ற தாயின் மற்றும் சித்தப்பாவின் வாழ்நாள் சேமிப்பான 129 சவரன் நகைகளையும் அள்ளிக் கொடுத்துக் குடும்பத்தையே நடுத்தெருவிற்குக் கொண்டு வந்துள்ளார் அந்த இளம்பெண்.” என புலனாய்வு செய்த போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 பேர் கும்பல் சிறையிலடைப்பு – கார், பைக் பறிமுதல்
இதையடுத்து இந்த நூதனக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான கார்த்திக் (21), அவரது நண்பர்கள் குமரகோபால் (20), பிரகாஷ் (22), ரமேஷ் (47) மற்றும் சூர்யா (28) ஆகிய 5 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மீதமாக இருந்த 6 சவரன் தங்க நகைகள், 50,000 ரூபாய் ரொக்கப் பணம், 1 சொகுசு கார், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வீட்டில் இருந்து நகைகளைத் திருடிக் கொடுத்த அந்த இளம்பெண் மீதும் போலீசார் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
