மதுரை அருகே கொழுந்தியாவின் தவறான நடத்தை மற்றும் கள்ளக்காதலைக் கண்டித்த மச்சானை, அவரது 10 வயது சிறுவன் கண்முன்னே கள்ளக்காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 4 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருமலையூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் அறிவரசன் (40). இவர் கப்பலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயபாரதி. தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில வருடங்களாக விஜயபாரதி கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், அறிவரசனின் கொழுந்தியா (மனைவியின் தங்கை) சிவரஞ்சனி என்பவருக்குப் பெற்றோரால் மாப்பிள்ளை பார்க்கப்பட்டுத் திருமணம் நடந்துள்ளது. தற்பொழுது அவர் கோயம்புத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆனால், சிவரஞ்சனி கோவையில் சௌந்தர் என்பவனுடன் தவறான பழக்கம் மற்றும் கள்ளக்காதலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மச்சான் அறிவரசனுக்குத் தெரியவரவே, அவர் தனது கொழுந்தியா சிவரஞ்சனியைத் தொடர்பு கொண்டு, “குடும்பப் பெண்ணாக ஒழுங்காக வாழ வேண்டும்” என மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவரஞ்சனி, தன் மச்சான் தன்னை மிரட்டிய விபரத்தைத் தனது கள்ளக்காதலன் சௌந்தரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற சௌந்தர், அறிவரசனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி, நேற்று இரவு சுமார் 6 மணியளவில் சௌந்தர் மற்றும் அவனது நண்பர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேர் கொண்ட கும்பல், ‘TN 66 AM 1186’ என்ற எண் கொண்ட பொலிரோ காரில் பயங்கர ஆயுதங்களுடன் திருமலையூரில் உள்ள அறிவரசன் வீட்டிற்குப் பாய்ந்தது.
அப்போது வீட்டில் அறிவரசனின் மகன் புகழ் இனியன் மட்டுமே முன்பக்கத்தில் இருந்துள்ளான். அந்த கும்பல் சிறுவனிடம், “உங்க அப்பா எங்கடா?” என மிரட்டும் தொனியில் கேட்டுள்ளது. அதற்கு அச்சிறுவன், “அப்பா பாத்ரூம் போயிருக்காங்க” என்று கூறியுள்ளான். உடனே சௌந்தர் மற்றும் அவனது கூட்டாளிகள் பாத்ரூம் கதவை அதிரடியாக உடைத்து, உள்ளே இருந்த அறிவரசனைப் பலவந்தமாக வெளியே இழுத்து வந்து கீழே தள்ளினர். பின்னர், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொடூரத் தாக்குதல் நடத்தினர்.
அறிவரசன் உடல் முழுவதும் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன் புகழ் இனியன், “அப்பாவை வெட்டுறாங்களே… காப்பாத்துங்க…” எனப் பயத்தில் அலறிக் கூச்சலிட்டுள்ளான். சிறுவனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட சௌந்தர் மற்றும் அவனது கூட்டாளிகள், உடனே தங்களின் பொலிரோ காரில் ஏறித் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அறிவரசனை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரகலா, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் சௌந்தர் மற்றும் அவனது கூட்டாளிகள் 3 பேரைத் தீவிரமாகத் தேடி வருகிறார்.
