சாபம் விட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்த வாலிபர்
புதுச்சேரி அரியூர் பெண் கொலையில் அப்பகுதியைச் சேர்ந்த புதுமாப்பிள்ளை கைது செய்யபட்டார். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த அரியூர்பேட் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி கோவிந்தம்மாள் (40). ஜிப்மர் ஒப்பந்த ஊழியரான இவர் கடந்த 3ம்தேதி அரியூரில் நடந்து சென்றபோது மர்மநபர்களால் இரும்பு ராடால் தலையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலய்யன் தலைமையிலான போலீசார் கொலை வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் எஸ்பி வம்சித ரெட்டி உத்தரவின்பேரில் சிறப்பு அதிரடிப் படையுடன், 2 தனிப்படை சேர்ந்து நடத்திய விசாரணையில் துப்பு துலங்கியது.
இதில் அரியூர்பேட், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி (33) என்பவர் கோவிந்தம்மாளை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்ததும், புதுமாப்பிள்ளையான இவருக்கு திருமணமாகி 6 மாதமே ஆகும் நிலையில் இவரது மனைவி கர்ப்பிணியாக இருப்பதும் தெரியவந்தது. சந்தேகத்தின்பேரில் அவரை தனிப்படை பிடித்து விசாரித்தபோது, கோவிந்தமாளை சம்பவத்தன்று இரும்பு ராடால் அடித்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து அதிரடியாக விசாரித்தனர்.
விசாரணையில் அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில், புதுச்சேரி அரியூர்பேட்டில் வசிக்கும் பஞ்சமூர்த்திக்கு திருமணமாகி 6 மாதமே ஆகும் நிலையில், திருபுவனையில் தனியார் கம்பெனியில் ஒப்பந்த பணியில் சூப்பர்வைசிங் லேபராக பணியாற்றி வருகிறார். வாரந்தோறும் அவர் புதுச்சேரிக்கு வந்து மனைவியை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். இதனிடையே தனது அங்கு உற்பத்தியாகும் கியர் ராடு ஸ்க்ராயை கடந்த 30-ம் தேதி புதுச்சேரிக்கு அவர் எடுத்து வந்த நிலையில் அரியூரில் தனது வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு சைடு வாய்க்காலில் மறைத்து வைத்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு சென்று வேலைகளை முடித்த இவர், இரவு 9 மணியளவில் புதிய மேம்பாலம் கட்டிக் கொண்டிருக்கும் பஸ் ஸ்டாண்டுக்கு அருகே இரும்பு ராடுடன் சுற்றித் திரிந்த நிலையில், முன்பகை காரணமாக அவ்வழியாக வந்த கோவிந்தமாளை சரமாரி தாக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவான நிலையில், ஊர்மக்களிடம் தன்னைப்பற்றி அரசல் புரசலாக தகவல் பரவே, திருபுவனைக்கு சென்றுவிட்ட நிலையில் மாலையில் கோவிந்தம்மாளின் இறுதிச்சடங்கு நடைபெறும்போது அங்கு வந்து ஒன்றும் தெரியாததுபோல் நாடகமாடியுள்ளார்.
தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில், பஞ்சமூர்த்திக்கு கோவிந்தம்மாளுடன் முன்பகை இருப்பது தெரியவரவே வீட்டில் இருந்த அவரை பிடித்து விசாரித்தபோது கொலை சம்பவத்தை ஒப்புக் கொண்டார். அதாவது தனக்கு திருமணமாகி 6 மாதமாகும் நிலையில், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் கோவிந்தம்மாள் தன்னைப் பற்றியும், கர்ப்பிணியான தனது மனைவி பற்றியும் அவதூறாக பேசியதோடு, குழந்தை கருவிலேயே கலைந்துவிடும் என சாபம் விட்டதாலும் அவர் மீது பஞ்சமூர்த்தி ஆத்திரத்தில் இருந்துள்ளார். மேலும் தான் வேலைக்கு செல்லும்போதெல்லாம் விபத்தில் செத்துவிடுவாய் என சாபம் விட்டதாலும் கோவிந்தம்மாள் மீது கோபத்தில் இருந்த பஞ்சமூர்த்தி சம்பவத்தன்று இரவு காத்திருந்து அவரை இரும்பு ராடால் சரமாரி தாக்கி படுகொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது.
பலகோணங்களில் இக்கொலை தொடர்பாக தனிப்படை விசாரித்தபோது பஞ்சமூர்த்தி மீது கோவிந்தம்மாள் குடும்பத்துக்கு இருந்த விரோதம் தொடர்பாக அரசல் புரசலாக போலீசுக்கு தகவல் கிடைக்கவே, சந்தேகத்தின்பேரில் பஞ்சமூர்த்தியை பிடித்து விசாரித்தபோது முழு உண்மை வெளிச்சத்திற்கு வரவே அவரை தனிப்படை கைது செய்துவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. கைதான பஞ்சமூர்த்தி கொடுத்த தகவலின்பேரில் கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் ஒருமரத்தின் அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரும்பு ராடலை போலீசார் கைப்பற்றினர்.