ராமநாதபுரத்தில் தனியார் உணவகத்தினரிடம் விளம்பரம் செய்வதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய பெண் இன்ஸ்டா பிரபலத்தை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.


ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பர்வீன் பிரியாணி என்ற பெயரில் பிரபல சைனீஸ் பேமிலி ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த ரெஸ்டாரண்ட்டுக்கு வந்த நம்புதாளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், உணவக மேலாளர் சாகுல் ஹமீதுவிடம் தனது பெயர் சபீனா ஹபி என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார். பின்னர் தான் பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்சர் என்றும், உங்கள் உணவகம் குறித்து வீடியோ ஒன்று பதிவு செய்தால் வியாபாரம் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். இதற்காக கணிசமான தொகையை கட்டணமாக அவர் கேட்டுள்ளார்.

ஆனால் மேலாளர் சாகுல் ஹமீது விளம்பரம் தேவையில்லை என கூறி, பணம் தர மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சபீனா ஹபி பணம் தர மறுத்தால் ஓட்டல் குறித்து சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பதிவிட்டு வியாபாரத்தை கெடுப்பேன் என்றும், மேலாளர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக போலீசில் புகார் தெரிவிப்பேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். அவரது மிரட்டலை பொருட்படுத்தாத மேலாளர், அவரை வீடியோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சபீனா, மேலாளரை தாக்க முயன்றார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலிசார் வந்தபோது, சபீனா அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். எனினும் போலீசார் சபீனா மற்றும் உணவக மேலாளரை, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சபீனா மேலாளர் தன்னிடம் அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டினார். எனினும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவர் சொன்னது பொய் என தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவரை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..


