திண்டிவனம் அருகே உணவகத்தில் தவறவிட்ட 17 சவரன் தங்க நகைகள் உள்ள பையை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, தாம்பரம், சி.டி.ஓ. காலனி, லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பிரசாந்த் – நளினி தம்பதியினர். இவர்கள் இருவரும் தனது குழந்தையுடன் காரில் திருவண்ணாமலையில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். திருமணத்தின் போது நளினி தான் அணிந்திருந்த சுமார் 17 சவரன் நகைகளை கழற்றி ஒரு பையில் எடுத்து வந்தார். சென்னை செல்லும் வழியில் திண்டிவனம் அருகே அம்மா உணவகத்தில் காலை சிற்றுண்டி அருந்திவிட்டு மீண்டும் சென்னை நோக்கி காரில் பயணம் செய்தனர். அவர்கள் சிறிது தூரம் சென்றுகொண்டிருந்தபோது, நகைகள் இருந்த பையை காரில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அந்தப் பையை உணவகத்தில் மறந்து வைத்து விட்டு வந்தது ஞாபகத்திற்கு வரவே உடனடியாக செஞ்சியில் பணிபுரியும் தனது உறவினரான சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமாருக்கு தொடர்பு கொண்டு தனது நகைப்பை அம்மா உணவகத்தில் காலை சிற்றுண்டி அருந்தும் பொழுது தவறுதலாக விட்டு விட்டு வந்தது குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து எஸ்.ஐ. சிவகுமார் அப்பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் வாகனத்தில் பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கவாசகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார். துரிதமாக செயல்பட்ட எஸ்.ஐ. மாணிக்கவாசகம் அம்மா உணவகத்திற்கு சென்று பார்த்த பொழுது அந்தப் பை அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையில் கேட்பாரற்று கிடந்தது. உடனடியாக அதனை கடையின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு அருகே உள்ள காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தாரணேஸ்வரிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து நகையை தொலைத்த தம்பதிகள் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து தாங்கள் தொலைத்த நகைகளை சரி பார்த்தபின் அந்த நகைகள் இருந்த பை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நகை பையை பெற்றுக் கொண்ட நளினி-பிரசாந்த் தம்பதியர் போலீசாருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அடுக்குமாடி குடியிருப்பில் 13 வீடுகளில் கொள்ளை…16 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீஸ்


