spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பட்டா மாறுதலுக்கு ரூ.13,000 லஞ்சம்: லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் VAO கைது!

பட்டா மாறுதலுக்கு ரூ.13,000 லஞ்சம்: லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் VAO கைது!

-

- Advertisement -

பட்டா மாறுதலுக்கு ரூ.13,000 லஞ்சம் கோரிய கிராம நிர்வாக அலுவலர் கைது. கையும் களவுமாகப் பிடித்த லஞ்ச ஒழிப்புப் போலீசார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகாவுக்குட்பட்ட வேந்தோணி கிராமத்தில், பட்டா பெயர் மாறுதல் செய்வதற்கு லஞ்சம் வாங்கியதாகக் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) ஒருவரை இன்று லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.

பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத புகார்தாரர் ஒருவர், தனது தாயார் பெயரில் சமீபத்தில் ஒரு இடத்தை கிரையம் (பதிவு) செய்துள்ளார். இந்த இடத்திற்கான பட்டா பெயர் மாறுதலைச் செய்வதற்காக, அந்தப் பகுதிக்குட்பட்ட வேந்தோணி கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) கருப்புசாமி (58) என்பவரை அவர் அணுகியுள்ளார்.

we-r-hiring

ஆரம்பத்தில், வி.ஏ.ஓ. கருப்புசாமி, “மனு எனது லாகினுக்கு வரவில்லை; வந்தவுடன் பட்டா மாறுதலுக்கு நடவடிக்கை எடுக்கிறேன்” என்று கூறி, புகார்தாரரின் தொலைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்டார்.

சில நாட்களுக்குப் பிறகு, புகார்தாரரின் மொபைல் எண்ணுக்கு, நிலத்தின் பட்டா பெயர் மாறுதலாகி விட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. உடனே, வி.ஏ.ஓ. கருப்புசாமி, புகார்தாரரைத் தொலைபேசியில் அழைத்து, “நான் பரிந்துரை செய்ததால் தான் உங்களுக்கு உடனடியாகப் பட்டா கிடைத்தது. ஆகையால், எனக்குக் கைமாறாக ₹15,000 கொடுக்க வேண்டும்” என்று லஞ்சமாகக் கேட்டுள்ளார்.

அதற்குப் புகார்தாரர், தன்னால் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையின் முடிவில், வி.ஏ.ஓ. கருப்புசாமி, லஞ்சத் தொகையில் இருந்து ₹2 ஆயிரத்தைக் கழித்து, ₹13,000 பணத்தைக் கட்டாயம் தர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

வி.ஏ.ஓ.வின் இந்த லஞ்சக் கோரிக்கை குறித்து லஞ்சம் கொடுக்க விரும்பாத புகார்தாரர், ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (லஞ்ச ஒழிப்புத் துறை) போலீசில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் புகார்தாரருக்கு உரிய அறிவுரைகளை வழங்கி, ரசாயனம் தடவிய ₹13,000 பணத்தை வி.ஏ.ஓ. கருப்புசாமியிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர்.

வி.ஏ.ஓ. கருப்புசாமி, புகார்தாரரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் அவரைப் பிடித்து, ரசாயனம் தடவிய பணத்தை மீட்டனர்.

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ. கருப்புசாமியிடம் லஞ்ச ஒழிப்புப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவது குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவும் நிலையில், இந்த நடவடிக்கை மற்ற அரசு ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

MUST READ