திண்டுக்கல் மாவட்டம் பழனியில், ரூ.100 கோடி மதிப்பிலான அறக்கட்டளை நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய சார்பதிவாளர் பாலச்சந்தர் மற்றும் அலுவலக உதவியாளர் சிவசங்கரி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.


வழக்கின் பின்னணி:
பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமாா் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து முறைகேடான முறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி (CBCID) போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஏற்கனவே இவ்வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா மீதும் துறை ரீதியான சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
துறை ரீதியான தீவிர விசாரணை:
முறைகேடான இந்தப் பத்திரப்பதிவு விவகாரம் குறித்துப் பத்திரப்பதிவுத்துறை சார்பில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சர்ச்சைக்குரிய பத்திரப்பதிவை மேற்கொண்ட ஜஸ்டின் மணிகண்டன் தொடர்பான முந்தைய ஆவணங்களை ஆய்வு செய்யத் தணிக்கைக் குழுவும் களமிறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலத்தைப் பத்திரப்பதிவு செய்வதற்கு உடந்தையாகவும் உதவியாகவும் இருந்ததாகக் கூறப்பட்ட பழனி சார்பதிவாளர் அலுவலகத்தின் சார்பதிவாளர் பாலச்சந்தர் மற்றும் அலுவலக உதவியாளர் சிவசங்கரி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அடுத்தடுத்து அரசு அதிகாரிகள் மீது ப பாய்ந்து வரும் இந்த அதிரடி நடவடிக்கைகளால், பழனி சார்பதிவாளர் அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பும் கலக்கமும் ஏற்பட்டுள்ளது.
இவ்வழக்கில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை அமைப்புகள் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன.
