உயிருடன் இருக்கும் மாமியாருக்கு இறப்புச் சான்றிதழ் தயாரித்து, சொத்துக்கள் மற்றும் நகைகளை அபகரிக்க முயன்ற மருமகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதியவர் ஒருவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வங்கியில் அம்பலமான மோசடி
மதுரை சிக்கந்தர் சாவடி, முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பிள்ளை. கணவர் உயிரிழந்த நிலையில், தனது இரு மகன்கள் மற்றும் மருமகள்களுடன் வசித்து வந்தார். இவரது இளைய மகன் பெருமாளுக்கும், அவரது மனைவி சுந்தரிக்கும் இடையே விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்த சூழலில், கடந்த மார்ச் மாதம் பெருமாள் திடீரென உயிரிழந்தார்.
இதையடுத்து, தனது மகன் பெருமாள் பெயரில் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை மீட்பதற்காக முத்துப்பிள்ளை வங்கியை அணுகியுள்ளார். அப்போது, முத்துப்பிள்ளை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறி வங்கியில் இறப்புச் சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முத்துப்பிள்ளை விசாரித்தபோது, மருமகள் சுந்தரி பெயரில் முத்துப்பிள்ளை இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டுப் போலி வாரிசுச் சான்றிதழ் பெறப்பட்டது அம்பலமானது.
ஆட்சியரிடம் பாதுகாப்பு மற்றும் நடவடிக்கை கோரி மனு
தனக்குச் சொந்தமான நிலம் மற்றும் நகைகளை அபகரிப்பதற்காகவே உயிருடன் இருக்கும் தன் பெயரில் இறப்புச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகித் தனது உயிருக்குச் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் முத்துப்பிள்ளை கவலை தெரிவித்தார். இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணாவைச் சந்தித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் புகார் மனு அளித்தார்.
முத்துப்பிள்ளை ஆவேசம்:
மனு அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த முத்துப்பிள்ளை தெரிவிக்கையில், “என் இளைய மகன் 6 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததில் சந்தேகம் உள்ளது. இந்த நிலையில் நான் உயிருடன் இருக்கும்போதே நான் இறந்துவிட்டதாக வி.ஏ.ஓ (VAO) மற்றும் தலையாரி சேர்ந்து போலிச் சாட்சிகளுடன் வாரிசுச் சான்றிதழ் தயாரித்துக் கொடுத்துள்ளனர். இதற்கு காரணமான மருமகள் சுந்தரி மற்றும் பொய் சாட்சிக் கையெழுத்திட்டவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இச்சம்பவம் குறித்து முத்துப்பிள்ளையின் மூத்த மகன் ராமசாமியும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்து, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இச்சம்பவம் மதுரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
