ஹேமா குழு அறிக்கை அடிப்படையிலான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று மலையாள நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
ஹேமா குழு அறிகையில் மலையாள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதன்காரணமாக மலையாள திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து மோகன்லால் விலகினார். இதனை தொடர்ந்து சங்க நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்தனர்.
இந்த நிலையில், கேரள கிரிக்கெட் சங்க விளையாட்டு போட்டிக்கான லோகோவை நடிகர் மோகன்லால் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர் சந்திந்த நடிகர் மோகன்லால், ஹேமா குழு அறிக்கை அடிப்படையிலான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தார். ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு ஒட்டுமொத்த மலையாள திரையுலகமே பதிலளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மலையாள திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்து கூண்டோடு ராஜினாமா என்பது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு என்று கூறிய மோகன்லால், தான் கேரளாவில்தான் இருக்கிறேன், எங்கேயும் ஓடி ஒளியவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், பாலியல் புகாரை வைத்து மலையாள திரைத்துறையை மதிப்பிடுவது தவறானது என்றும் மோகன்லால் குறிப்பிட்டார்.
மலையாள சினிமா சிதைந்து போகக்கூடாது என்பதில் உறுதியோடு உள்ளதாக தெரிவித்த அவர், ஹேமா கமிட்டியின் அறிக்கை மீது அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.