போலி என்ஆர்ஐ சான்றிதழ் விவகாரம் தொடர்பாக புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்திருந்த, 44 வடமாநில மாணவர்கள்- பெற்றோர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த புதுச்சேரி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு சென்டாக் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் என்ஆர்ஐ (வெளிநாடு வாழ் இந்தியர்) ஒதுக்கீட்டில் 116 இடங்கள் உள்ளன. இதில் முதல், 2ம் கலந்தாய்வில் 37 மாணவர்கள் சேர்ந்தனர். அப்போது என்ஆர்ஐ ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் அளித்து மாணவர்கள் சேர்வதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் மீதமுள்ள 79 இடங்களுக்கு 134 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த மாணவர்களின் சான்றிதழ்களை சென்டாக் நிர்வாகம் சரிபார்த்தது. இதில் 44 பேரின் என்ஆர்ஐ ஸ்பான்சர் சான்றிதழ் போலியானது என தெரியவந்தது. இதையடுத்து மாணவர்களின் சான்றிதழ்களை வெளிநாட்டு தூதரகம் அனுப்பி சென்டாக் நிர்வாகம் விசாரித்ததில் 44 மாணவர்கள் போலி சான்றிதழ் வழங்கியது குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் உறுதிசெய்தது. அதன் படி இதுதொடர்பாக லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் சென்டாக் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் 44 மாணவர்கள் மீதும் லாஸ்பேட்டை போலீசார் போலி ஆவணங்கள் தயாரித்தல், போலி ஆவணங்களை உண்மை என சமர்பித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிக்கிய மாணவர்கள் டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், அந்தமான் நிகோபார் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மாணவர்கள் என்பதால் அவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கையை போலீசார் எடுக்கவில்லை. அதேநேரத்தில் மாணவர்களையும், பெற்றோர்களையும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணையில் யார் மூலமாக போலி சான்றிதழ் பெற்றார்கள்? அவர்களுக்கு புரோக்கர்களாக செயல்பட்டவர்கள் யார்? என கேட்க முடிவு செய்துள்ளனர். மாணவர்கள் நேரடியாக இந்த தவறை செய்திருக்க வாய்ப்பில்லை என்பதாலும், பெற்றோர்கள்தான் யாரையாவது அணுகியிருக்க வேண்டும் என்ற ரீதியில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பெற்றோர்கள் கைகாட்டும் பட்சத்தில் ஏஜெண்டுகளை கைது செய்து, விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே முதல், 2வது கலந்தாய்வில் என்ஆர்ஐ இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்களையும் அரசு ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் போலி சான்றிதழ்கள் வழங்கியிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்தும் சென்டாக் நிர்வாகம் ஆய்வு செய்ய உள்ளது.