அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராம்மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகானி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 133 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் காயமடைந்த 100க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்துள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்த விஜய் ரூபானி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை அனுபவம் வாய்ந்த கேப்டன் சுமீத் சபர்வால், துணை விமானி க்ளைவ் குந்தர் ஆகியோர் இயக்கினர். இந்த விமானத்தில் 169 இந்தியர்கள், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 53 பயணிகள் உட்பட 61 வெளிநாட்டு பயணிகள் பயணித்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. புறப்பட்ட சில நிமிடத்திலேயே அவசரகால அழைப்பை விமான நிலைய கட்டுப்பாட்டுக்கு அறைக்கு விமானி விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. மேலும் விபத்து தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணையை தொடங்கியுள்ளது.
அகமதாபாத் விமான விபத்து குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இருவரையும் அகமதாபாத் சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, குஜராத் முதலமைச்சர் பூபேந்தர் படேலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டு உள்ளார்.