தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே(என்.டி.ஏ) தான் அங்கம் வகிப்பதாக சந்திரபாபு நாயுடு தெளிவுபடுத்தியுள்ளார்.
நடந்து முடிந்த 18 வது மக்களவை தேர்தலிலும், ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்குதேசம் 133 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், வருகிற 9ம் தேதி சந்திரபாபு நாயுடு அமராவதியில் 4வது முறையாக முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.

அதேபோல் மத்தியில் ஆட்சியமைக்க 272 உறுப்பினர்கள் தேவை என்கிற நிலையில், ஆளும் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. குறிப்பாக உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருப்பது, பாஜகவுக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது. எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. ஆகையால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 3வது முறையாக ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நபர்களாக மாறியுள்ளனர். இந்தச்சூழலில் இந்தியா கூட்டணி சார்பிலும் சந்திரபாபு நாயுடுவை இழுக்க முயற்சி நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகின. இந்தநிலையில் தான், தேசிய ஜனநாயக கூட்டணி(என்.டி.ஏ)யிலேயே தொடர்ந்து அங்கம் வகிப்பதாக சந்திரபாபு நாயுடு தெளிவுபடுத்தியுள்ளார்.
இதிகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சந்திரபாபு நாயுடு, “எனக்கும் அனுபவங்கள் உள்ளன. நாட்டில் பல்வேறு அரசியல் மாற்றங்களை கண்டுள்ளேன். இது மாதிரியான சிறப்பு தேர்தலை பார்த்தது இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறேன். இன்று நடக்கும் என்டிஏ கூட்டணியின் கூட்டத்துக்கு செல்கிறேன். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமாக இருந்து இந்த வெற்றியை பெற்றுள்ளோம். ஜனசேனா தலைவர் பவன் கல்யாணுக்கும், பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எனது நன்றிகள்.” என்று தெரிவித்தார்.