
பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதில் குளறுபடிகள் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளது.
ஜம்மு காஷ்மிரில் பிரபலமான சுற்றுலாத்தலாமாக உள்ள பஹல்காம் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதல் நடந்து இரு மாதங்களுக்கு மேல் ஆகியும் விசாரணையில் ஒருவித தொய்வு காணப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் தேசிய புலனாய்வு முகமை, ஜூன் 22 அன்று பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இருவரை கைது செய்துள்ளது. பஹல்காம் பட்கோட்டைச் சேர்ந்த பர்வேஸ் அஹமது ஜோத்தர், பஷீர் அஹமது ஜோத்தர் ஆகிய இருவரும் தான் கைதானவர்கள்.
இவர்கள் பஹல்காம் தாக்குதலை நிகழ்த்திய 3 பயங்கரவாதிகளுக்கும் ஜில் பார்க் பகுதியில் உள்ள ஒரு குடிசையில் மறைமுகமாக தங்குவதற்கு இடம் கொடுத்ததோடு, உணவு உள்ளிட்ட தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அடைக்கலம் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. அத்துடன் தாக்குதல் நிகழ்த்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தடை செய்யபட்ட லஷ்கர் – இ – தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதையும் உறுதிபடுத்தியுள்ளனர். அத்துடன் 3 பயங்கரவாதிகளையும் மிக தெளிவாக அடையாளம் காட்டியுள்ளதாகவும் என்.ஐ.ஏ தெரிவித்திருக்கிறது.

முன்னதாக பஹல்காம் தாக்குதல் நடந்த உடனேயே பயங்கரவாதிகள் என ஜம்மு காஷ்மீர் போலீஸார் வெளியிட்ட வரைபடத்தில் இடம்பெற்ற 3 பேரும் உண்மையான தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இல்லை என்றும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்திருக்கிறது. என்.ஐ.ஏ வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தியை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி, பஹல்காம் தாக்குதல் தொடர்பான விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. முறையான விசாரணை நடத்தாமல் குற்றவாளிகள் என வரைபடத்தை வெளியிட்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களாகியும் இதற்கு இன்னும் எந்த அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை. இந்த நிலையில் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பே , பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட ஜுனைத் என்பவரின் செல்போனில் இருந்த புகைப்படங்களை வைத்து அவசர அவசரமாக வரைபடங்களை தயாரித்து வெளியிட்டது ஏன்? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதான் மோடி அரசின் தேசிய புலனாய்வு விசாரணையா என்றும் சாடியுள்ளது.
முக்கியமாக பஹல்காம் தாக்குதலில் உண்மையான குற்றவாளிகள் யார்? அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? அவர்களை இப்போது வரை கைது செய்யப்படாததன் காரணம் என்ன? என்றும் சந்தேகத்தை முன்வைத்துள்ளது காங்கிரஸ். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸும், இந்த தாக்குதலில் உயிரிழந்த 26 உயிர்களுக்கு மதிப்பு இல்லையா? தாக்குதல் நடந்து 62 நாட்களாகியும் மோடி அரசு இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்த சம்பவத்தை நாடு மறக்காது!” என்றும், பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.