அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு எதிரானது என்றும், அவர்கள் பொதுச் சேவைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையின் செயல்பாடுகள் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு விசாரணையில் உள்ளது. அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவது மற்றும் அரசு மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவது குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்திருந்தது.

மேலும், அரசு போதுமான வசதிகள் மற்றும் நிதி ஒதுக்கியிருந்தாலும், சில மருத்துவர்களின் தனியார் தொழில் நடவடிக்கைகளே அரசு மருத்துவமனைகளின் தரத்தை பாதிப்பதாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதையடுத்து, தனியார் மருத்துவத் தொழிலில் ஈடுபடும் அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உயர்மட்ட விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, “அரசு மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்யக்கூடாது என்ற நோக்கம் பொதுநலன் சார்ந்தது. இது ஒருவரை மட்டும் குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல; விதிமுறைகளை மீறும் அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் பொருந்தும்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விருப்பமில்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து மனுதாரர் தனது மனுவை திரும்பப் பெற அனுமதி கோரிய நிலையில், அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
லக்னோ பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து – 11 பேர் உயிரிழப்பு
