
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று (ஆகஸ்ட் 10) மாலை 05.00 மணிக்கு மக்களவையில் பதிலுரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது எதிர்க்கட்சிகளின் ‘நோ பால்’. ஒருமுறை ‘நோ பால்’ போட்டால் பரவாயில்லை; நீங்கள் ஏன் மீண்டும் மீண்டும் நோ பால் வீசுகிறீர்கள்? ஐந்து ஆண்டு அவகாசம் கொடுத்தும் எதிர்க்கட்சிகள் எந்த முன்னெடுப்பும் செய்யாமல் ‘நோ பால்’ வீசுகிறீர்கள்.
மக்களவையில் தி.மு.க.வைக் குறி வைத்துப் பேசும் மத்திய அமைச்சர்கள்!
எங்கள் அரசு சதமடிக்கிறது; ஆனால் எதிர்க்கட்சிகள் ‘நோ பால்’ வீசுகின்றன. நாட்டுக்கு நீங்கள் ஏமாற்றத்தைத் தவிர வேறு எதையும் தரவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல் நாளில் ராகுல் காந்தி பேசாதது ஏன்? நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ஷ்டம் இல்லாமலேயே இருக்கிறது. மக்களவையின் முக்கிய தலைவரான ஆத்ர் ரஞ்சன் சவுத்ரிக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்தியா கூட்டணி அல்ல; ஈகோ கூட்டணி. காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஸ்தாபனம். காங்கிரஸ் தலைவர்களுக்கென்று ஒரு தனித்துவமே கிடையாது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அகங்காரம் கொண்ட கூட்டணி. தமிழ்நாட்டில் பாரதமாதாவிற்கு பூஜை செய்வது தடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் கட்சத்தீவை மீட்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்திரா காந்தி ஆட்சியில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. மணிப்பூரில் அமைதியைக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முழுமையாக முயற்சி செய்கின்றன. உயர்நீதிமன்றத்தின் ஒரு உத்தரவு தான் மிகப்பெரிய வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
“அதிகாரத்தின் மீதே எதிர்க்கட்சிகளுக்கு ஆசை”- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.