பாஜக எம்.எல்.ஏ-வை காணவில்லை… பரபரப்பு போஸ்டர்
லஞ்சம் வாங்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக சென்னகிரி தொகுதி முழுவதும் காணவில்லை போஸ்டர் ஒட்டி காங்கிரஸ் இளைஞரணி உறுப்பினர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
சென்னகிரி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் விருபாக்ஷப்பா லஞ்சம் வாங்கிய வழக்கில் கடந்த நான்கு நாட்களாக தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள அவரது சென்னகிரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி பிரிவை சேர்ந்த நபர்கள் சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை என்று பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டரில் 72 வயதான சட்டமன்ற உறுப்பினர் வெள்ளை நிறம் 5.9 அடி உயரம் கடைசியாக முதல்வர் அலுவலகத்தில் 4.3.2023 ஆம் தேதி காணப்பட்டார் அதன் பிறகு காணவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னகிரி தொகுதி முழுவதும் இந்த போஸ்டரை காங்கிரஸ் கட்சி இளைஞரணி உறுப்பினர்கள் ஒட்டி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரை உடனடியாக காவல்துறை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். விருபாக்ஷப்பாவை முதல்வர் நேரடியாக பாதுகாத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.