நாட்டையே வெற்றியடையச் செய்யும் சக்தி கல்விக்கு தான் உள்ளது- மோடி
டெல்லியில் நடைபெறும் புதிய கல்வி கொள்கையின் 3-வது ஆண்டு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாட்டையே வெற்றியடையச் செய்யும் சக்தி கல்விக்கு தான் உள்ளது. தாய்மொழியில் கல்வி என்பது மிகவும் முக்கியமானது. பல வளர்ந்த நாடுகள் தாய்மொழியில் கல்வியை பயிற்றுவிக்கின்றன. எனவே நாட்டின் வளர்ச்சிக்கு தாய்மொழி கல்வி என்பது மிக மிக முக்கியமானது. தேசிய கல்விக்கொள்கை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. ஆராய்ச்சி & கண்டுபிடிப்புக்கான மையமாக இந்தியாவை மாற்றுவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கமாக கொண்டுள்ளது. புதிய மாற்றங்களை மாணவர்கள் உணர்ந்துள்ளனர். இளைஞர்களின் திறமையை விட அவர்களின் மொழியின் அடிப்படையில் அவர்களை மதிப்பிடுவது மிகப்பெரிய அநீதி.
எதிர்காலத்தை நாம் கண்காணிக்க வேண்டும், எதிர்கால சிந்தனையுடன் சிந்திக்க வேண்டும். நம் குழந்தைகளை புதுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் உருவாக்கி, புத்தகச் சுமையிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். குழந்தைகள் சுதந்திரமாக பறக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் நான் கூற விரும்புகிறேன். அவர்கள் எப்பொழுதும் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளவும், செய்யத் துணியவும் முடியும் என்பதற்காக நாம் அவர்களிடம் நம்பிக்கையை விதைக்க வேண்டும். குறிப்பாக, இதுவரை அறிவியல் மற்றும் புனைகதைகளில் வைக்கப்பட்டிருந்த செயற்கை நுண்ணறிவு, இப்போது நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது” என்றார்.