பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.பீகார் மாநிலத்தில் அக்டோபர் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் உளவுத்துறை அதிகாரிகள் பீகார் காவல்துறைக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். அதில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் நேபால் வழியாக பீகாருக்குள் ஊடுருவி உள்ளதாக கூறியுள்ளனர். பாகிஸ்தானின் ராவல்பிண்டி, உமார்கோட், பஹாவல்பூரை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் கடந்த வாரம் பீகாருக்குள் நுழைந்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் நேபாள் தலைநகர் காத்மாண்டு வழியாக பீகாருக்குள் நுழைந்துள்ளதாக எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.
இந்த எச்சரிக்கையை அடுத்து பீகார் காவல்துறை உச்சகட்ட அவசர நிலையை பீகார் மாநிலத்தில் பிறப்பித்துள்ளது. சமீப மாதங்களுக்கு முன்னர் ஜம்மு & காஷ்மீரின் பகல்ஹாமில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளினுடைய முகாம்கள் மற்றும் தளங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்த இருந்தனர். இதில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். இது நடந்த சில மாதங்களுக்கு பிறகு பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் உளவுத்துறை வழங்கியுள்ள தகவலின் படி பீகார் மாநிலத்தில் அம் மாநில காவல்துறை தீவிரமான தேர்தல் மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கூறுகிறது.
