‘இந்தியா’ என்ற பெயரை தீவிரவாத அமைப்புகளும் பயன்படுத்துகின்றன- மோடி
இந்தியா என்ற கூட்டணி கட்சியின் பெயரை பிரதமர் மோடி Popular Front of India என்ற அமைப்புடன் ஒப்பிட்டு பேசினார்.
மக்களவையின் மழைக்கால கூட்டத் தொடருக்கான வியூகத்தை வகுப்பதற்காக பாஜக செவ்வாய்க்கிழமை காலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியது. பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷனாவ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, “எதிர்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றனர். எதிர்கட்சிகள் கூட்டணி அதிக நாட்களுக்கு எதிர்கட்சியாகவே இருக்க வேண்டும்மென தீர்மானித்துவிட்டனர், அது தான் அவர்களின் தலையெழுத்தாகவும் உள்ளது. விரக்தியும் ஏமாற்றமும் அடைந்த எதிர்க்கட்சிகள் தற்போதைய நிலையிலேயே தொடர தீர்மானித்துள்ளது.
இதுபோன்று குறிக்கோளற்ற எதிர்கட்சிகளை பார்த்ததே இல்லை. இந்தியா என்ற பெயரை தீவிரவாத அமைப்புகளும் கூட பயன்படுத்துகின்றன. இந்தியா என்ற பெயர் கிழக்கு இந்தியா கம்பெனி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இந்தியன் முஜாகிதீன் என்று ஏற்கனவே பயன்படுத்திவிட்டது. நாட்டின் பெயரை மட்டும் பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்த முடியாது. 2024 தேர்தலில் மக்கள் ஆதரவுடன் பாஜக எளிதாக வெற்றி பெறும்” என்றார்.