மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
நுரையீரல் தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனை அடுத்து, டெல்லியில் உள்ள சிபிஎம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இதேபோல் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.இதனை தொடர்ந்து, சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, ஆராய்ச்சி, பயிற்சி நோக்கங்களுக்காக சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.