கர்நாடகாவில் சித்தராமையாவுக்கு எதிராக வெடித்தது புரட்சி போராட்டம்
அமைச்சர் பதவி கோரி முதல்வர் சித்தராமையா வீட்டு முன் ஜீ எஸ் பாடில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலத்தின் 24-வது முதல்வராக சித்தராமையா துணை முதல்வராக டி.கே. சிவகுமார் மற்றும் 8 அமைச்சர்கள் கடந்த சனிக்கிழமை பதவி ஏற்றனர். காங்கிரஸ் அரசு ஆட்சி அமைந்த பிறகு தற்பொழுது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் செய்ய சட்டமன்ற கூட்டத்தொடர் கூடி நடைபெற்று வருகிறது. புதன் கிழமை சட்டமன்ற கூட்டத் தொடர் நிறைவு பெற்ற பிறகு டி கே சிவகுமார் மற்றும் சித்திராமையா ஆகிய இருவரும் டெல்லி சென்று மேலிட ஒப்புதல் உடன் முழு அமைச்சரவை பட்டியலை இறுதி செய்ய உள்ளனர்.

இதனிடையே இன்று கதக் மாவட்டத்தில் உள்ள ரோன் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜீ எஸ் பாடிலுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பெங்களூரு நகரில் உள்ள முதல்வர் சித்தராமையா வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் 135 சட்டமன்ற உறுப்பினர்கள் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் பல மூத்த தலைவர்களும் வெற்றி பெற்றுள்ளதால் பல தலைவர்கள் அமைச்சர் பதவி கோரி கட்சிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மேலும் பதவிக்காக போராட்டங்களும் துவங்கி உள்ளதால் காங்கிரஸ் கட்சி நெருக்கடி உருவாகி உள்ளது.


