நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ‘காக்ரூச் ஜனதா பார்ட்டி’ (CJP) அமைப்பின் ஆதரவோடு மும்பையில் நடைபெற்ற தீவிர மாணவர் போராட்டத்தின் போது, காவல்துறையினரின் கைது வாகனத்தை இளம்பெண் ஒருவர் நெஞ்சுறுதியோடு தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொந்தளிக்கும் மாணவர்கள்
நீட் தேர்வு விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தக் கோரியும், கல்வி அமைச்சரின் பதவ விலகலை வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் மாணவர்கள் திரண்டு போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, மும்பையில் திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராகப் பேரணியாகச் சென்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
காவல் வாகனத்தை முற்றுகையிட்ட இளம்பெண்
போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் மாணவர்களைக் கலைந்து போகுமாறு அறிவுறுத்தினர். ஆனால், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால், பாதுகாப்புப் படையினர் அவர்களைப் பலவந்தமாகக் கைது செய்து தங்களின் காவல் வாகனத்தில் ஏற்றினர்.

அப்போது, சக தோழர்கள் கைது செய்யப்படுவதைப் பார்த்த இளம்பெண் ஒருவர், அச்சமின்றிப் பாய்ந்து சென்று காவல்துறை வாகனத்தின் முன்பாக நின்று வாகனத்தை நகர விடாமல் தடுத்து நிறுத்தினார். “மாணவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், அறவழியில் போராடுபவர்களை அநியாயமாகக் கைது செய்வதை ஏற்க முடியாது!” — வாகனத்தை மறித்த இளம்பெண்ணின் ஆவேசக் குரல் . அந்த இளம்பெண்ணின் துணிச்சலான செயலைக் கண்ட மற்ற போராட்டக்காரர்களும் வாகனத்தைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. 
பணிந்தது காவல்துறை: மாணவர்கள் விடுதலை
இளம்பெண்ணின் இந்த அதிரடி நடவடிக்கையாலும், அதைத் தொடர்ந்து மற்ற மாணவர்களிடம் வெடித்த தீவிர எதிர்ப்பாலும் காவல்துறையினர் தடுமாற்றம் அடைந்தனர். நிலைமை கைமீறிச் செல்வதைத் தடுக்கும் பொருட்டு, கைது செய்யப்பட்டு வாகனத்தில் அடைக்கப்பட்டிருந்த மாணவர்கள் அனைவரையும் காவல்துறையினர் உடனடியாக நிபந்தனையின்றி விடுவித்தனர். மாணவர்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டக்களத்தில் உற்சாகக் குரல்கள் எதிரொலித்தன. இச்சம்பவம் தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் #CJPProtest, #NEETProtest போன்ற ஹேஷ்டேக்குகளுடன் வைரலாகி, நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றன.
அதிகாரக் கர்வத்திற்கு விழுந்த ‘நீதிச் சவுக்கடி’: விமர்சனம் குற்றமல்ல… ஜனநாயகத்தின் உயிர்மூச்சு!
