இந்தியாவில் அதிக சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு கொண்ட பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு எச்சரிக்கை லேபிள்களை கட்டாயமாக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் தெளிவான காலக்கெடு மற்றும் நடைமுறைத் திட்டத்தை 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


என்ன மாற்றம் வரப்போகிறது?
பேக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில், அதிக அளவு சர்க்கரை, உப்பு அல்லது நிறைவுற்ற கொழுப்பு உள்ளதை நுகர்வோர் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை குறியீடுகளை இடம்பெறச் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தற்போதைய முன்மொழிவில் சிவப்பு நிற ஹெக்ஸகான் வடிவ எச்சரிக்கை லேபிள்களை பயன்படுத்தும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவை மீறும் ஊட்டச்சத்துக்கள் குறித்து இந்த லேபிள்கள் நுகர்வோருக்கு உடனடியாக தெரியப்படுத்தும் வகையில் இருக்கும்.
10 நாட்களுக்குள் பதில்
இந்த திட்டத்தை கட்டங்களாக செயல்படுத்தினால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் காலவரையின்றி தாமதமாகும் வாய்ப்பு இருப்பதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இதையடுத்து எச்சரிக்கை லேபிள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான தெளிவான பாதையை 10 நாட்களுக்குள் தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குழந்தைகளின் உடல்நலம் குறித்து கவலை
அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு கொண்ட உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள் குறித்தும் நீதிமன்றம் கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் குழந்தைகளின் உணவுப் பழக்கம் மற்றும் உடல்நலத்தை கருத்தில் கொண்டு, நுகர்வோருக்கு தெளிவான தகவல்கள் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு என்ன பயன்?
இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்தால், ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு அதன் முன்பக்கத்திலேயே அதிக சர்க்கரை, உப்பு அல்லது நிறைவுற்ற கொழுப்பு உள்ளதா என்பதை நுகர்வோர் விரைவாக தெரிந்து கொள்ள முடியும்.
இதனால் குறிப்பாக குழந்தைகளுக்காக உணவுப் பொருட்களை வாங்கும் பெற்றோர், பேக்கெட் உணவுகளை தேர்வு செய்யும்போது கூடுதல் கவனத்துடன் முடிவு எடுக்க முடியும்.
அடுத்து என்ன நடக்கும்?
மத்திய அரசு மற்றும் உணவு பாதுகாப்பு அமைப்பு இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்ய வேண்டியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் 10 நாள் காலக்கெடு காரணமாக பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் லேபிளிங் விதிகளில் முக்கிய மாற்றங்கள் வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
