Homeசெய்திகள்இந்தியாமேற்குவங்கத்தில் ரயில்கள் மோதி கோர விபத்து; 7 பேர் பலி..

மேற்குவங்கத்தில் ரயில்கள் மோதி கோர விபத்து; 7 பேர் பலி..

-

- Advertisement -
மேற்குவங்கத்தில் ரயில் விபத்து - 7 பேர் பலி
மேற்குவங்கம் மாநிலம் டார்ஜிலிங்கில் விரைவு ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. 7 பேர்  உயிரிழந்த நிலையில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதியது. டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ரங்காபாணி ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கஞ்சன் ஜங்கா விரைவு ரயில், சிக்னல் கிடைக்காததால் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்குவங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது அதே தண்டவாளத்தில் வந்த மற்றொரு சரக்கு ரயில் , கண்ணிமைக்கும் நேரத்தில், விரைவு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3  மற்றும் 5 ரயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், ரயிலை ஓட்டிய லோக்கோ பைலட் உள்பட 7 பேர்  உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாலும், இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதாலும்  உயிர்ப்பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேற்குவங்கத்தில் ரயில் விபத்து - 7 பேர் பலி

இந்த விபத்து குறித்து  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “டார்ஜிலிங்கின் பான்சிதேவாவில் நடந்த ரயில் விபத்து குறித்த தகவலறிந்து வருந்துகிறேன். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதாக தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மருத்துவர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆம்புலன்ஸ்களும் விரைந்துள்ளன.” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது, “ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கிறது. விபத்துப் பகுதியில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து ரயில்வே அமைச்சகம் சார்பில்,   விபத்து குறித்து தகவல் அறிய தொலைபேசி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 033-23508794 (பிஎஸ்என்எல்), ரயில்வே எண் 033-23833326 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் விவரங்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

MUST READ