டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 70 தொகுதிகளில் மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதலமைச்சர் அதிஷி கல்காஜி தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித், பாஜக சார்பில் பர்வேஷ் வர்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர். டெல்லி நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது வாக்கினை செலுத்தினார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மொத்தம் 13 ஆயிரத்து 766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் 1 கோடியே 56 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் ஆவர். டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்புப் பணியில் 220 கம்பெனி துணை ராணுவப் படையினர், 35 ஆயிரத்து 626 டெல்லி காவல்துறையினர் மற்றும் 19 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8ம் தேதி அறிவிக்கப்படுகிறது