இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் (Airtel), தனது பயனர்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்த விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் சிலவற்றை அதிரடியாக நீக்கியுள்ளதுடன், சில திட்டங்களின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது.
குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டங்கள் நீக்கம், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த முக்கிய அத்தியாவசிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் தனது பட்டியலில் இருந்து அகற்றியுள்ளது.

அதன்படி: ரூ. 299, ரூ. 319, ரூ. 619, ரூ. 649, ரூ. 799 ஆகிய பிரபலமான ரீசார்ஜ் திட்டங்கள் இனி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டங்களின் விலை உயர்வு!
குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியது மட்டுமின்றி, வழக்கத்தில் உள்ள சில திட்டங்களின் விலையையும் ஏர்டெல் உயர்த்தியுள்ளது. அதன்படி, இதுவரை ரூ. 859-க்கு வழங்கப்பட்டு வந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை தற்போது ரூ. 899 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் வேதனை
திடீரெனக் குறைந்த கட்டணத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாலும் ஏர்டெல் பயனர்கள் கடும் அதிர்ச்சியும் சிரமமும் அடைந்துள்ளனர். நடுத்தர மற்றும் எளிய மக்கள் பயன்படுத்தும் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்துவது அவர்களின் மாதாந்திரச் செலவைக் கணிசமாக அதிகரிக்கும் எனக் கூறிப் பயனர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
