E20 பெட்ரோலை தொடர்ந்து பயன்படுத்துவது EcoSport கார்களின் என்ஜின் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அமைப்பில் (Emission System) பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என Ford India நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் நோக்கில் எத்தனால் கலந்த E20 பெட்ரோல் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வரும் நிலையில், சில பழைய வாகன மாடல்கள் அதற்கு முழுமையாக பொருந்தாது என்பதையும் வாகன உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில், Ford EcoSport வாகனங்களில் E20 பெட்ரோலை நீண்ட காலம் பயன்படுத்துவது என்ஜின் செயல்திறனை பாதிப்பதுடன், எரிபொருள் விநியோக அமைப்பு மற்றும் Emission System-இலும் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என Ford India தெரிவித்துள்ளது.

மேலும், E20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனத்தின் எரிபொருள் நுகர்வு அதிகரித்து, மைலேஜ் குறையும் வாய்ப்பும் இருப்பதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனால் வாகன பராமரிப்பு செலவும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உற்பத்தியாளர் பரிந்துரைகளுக்கு முரணாக E20 பெட்ரோலை பயன்படுத்துவதால், வாகனத்தின் வாரண்டி செல்லுபடியாகாத நிலை ஏற்படலாம் என்றும் Ford India தெரிவித்துள்ளது. எனவே, EcoSport வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன மாடல் E20 எரிபொருளுக்கு ஏற்றதா என்பதை சரிபார்த்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனத்தின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நீண்ட ஆயுளை உறுதிப்படுத்த, உற்பத்தியாளர் பரிந்துரைக்கும் எரிபொருளையே பயன்படுத்துவது அவசியம் என்றும் Ford India வலியுறுத்தியுள்ளது.
மொபைல் சிப்செட் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மீடியாடெக்
