அதிமுகவில் நிலவிவரும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் அரலேக்கரை விரைவில் சந்திக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் உருவாகியுள்ள உட்கட்சி பரபரப்பைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், சிவி சண்முகம் தரப்பைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று ஆளுநரின் தனிச் செயலாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இந்த மனுவில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறப்படும் உறுப்பினர்களுக்கு எதிராக அரசியல் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக உள்ள அர்லேக்கர் தற்போது கேரளாவில் நடைபெறும் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அவர் தமிழகம் திரும்பியதும், அவரை நேரில் சந்தித்து தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகள் குறித்து விளக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிமுக தலைமை சட்டத் துறையினருடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும், கட்சியின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் சட்ட ரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவிலிருந்து வருவோர் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
