மகாராஷ்டிர சட்டசபையில் அமோக வெற்றி பெற்றதையடுத்து, பாஜகவைச் சேர்ந்தவர்தான் முதல்வர் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பதவிக்கான போட்டியில் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரசாரத்தின் போதே இதனைத் தெரிவித்தார்.
இப்போது வெற்றிக்குப் பிறகு ஃபட்னாவிஸுக்கான பாதை தெளிவாகிவிட்டது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் இந்த முறை முதல்வர் நாற்காலி தன்னிடம் இருக்காது என்று தனது அறிக்கையின் மூலம் தெரிவித்தார். மத்திய அமைச்சரவையில் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை பிரதமர் மோடி சேர்த்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது, 2024 வெற்றி என்பது பல வகைகளில் பாஜகவுக்கு சிறப்பான வெற்றியைத் தேடித் தந்துள்ளது. 2019 தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்ற பிறகும் பாஜக ஆட்சியைப் பிடிக்கவில்லை. முதல்வர் பதவிக்கான மோதலில் கூட்டணியில் இருந்த உத்தவ் தாக்கரே விலகிச் சென்றார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சிவசேனாவில் பிரிவு ஏற்பட்டு ஆட்சிக்கு வந்தது. ஆனால் முதல்வர் பதவி பாஜகவுக்கு கிடைக்கவில்லை.
2014 முதல் 2019 வரை முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ், ஷிண்டே அரசில் துணை முதல்வராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது ஒரு பேட்டியில் தேவேந்திர ஃபட்னாவிஸ், ‘‘இந்த கூட்டணி அரசில் நான் பதவியில் இருக்க விரும்பவில்லை’’ என்று மன வருத்தத்தைக் கொட்டினார். ஆனால் அரசியல் பிரளயங்களால், கூட்டணி ஆட்சியை தக்கவைக்க பாஜக கட்சி அவரை துணை முதலமைச்சராக்கியது. ஆனால் இப்போது பாஜக பலமாக வெற்றி பெற்றுள்ளதால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராவதில் சிக்கல் இல்லை.
இதனால் மோடியின் மத்திய அமைச்சரவையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. மூன்றாவது முறையாக, மகாயுதி 220+ என மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. 125 இடங்களுக்கு மேல், பாஜக வென்றுள்ளதால் தேவேந்திர ஃபட்னாவிஸை இந்த முறை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க பாஜக முடிவு செய்தது. ஃபட்னாவிஸை முதல்வராக்க ஆர்எஸ்எஸ் பரிந்துரை செய்துள்ளது. மக்களவை தேர்தலில் மகாயுதியின் தோல்விக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் மீதும் பழி சுமத்தப்பட்டது.
இந்த வெற்றிக்குப் பிறகு, தேவேந்திர பட்னாவிஸ் மூன்றாவது முறையாக மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்கிறார். ‘என் தண்ணீர் குறைவதைப் பார்த்து… என் கரையில் வீடு கட்டிக் கொள்ளாதே, நான் கடல்…, நான் திரும்பி வருவேன்.’ தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டசபையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பேசி இருந்தார். அதற்கு இன்று நவம்பர் 23 அர்த்தம் கிடைத்துள்ளது.